குறைபாடுகள் இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள் – தமிழிசை
தேசிய கல்விக் கொள்கையை அரசியல் ஆக்கக்கூடாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து உள்ளார். கும்பகோணத்தில் உலோகத்தில் உருவாக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழிசை இது குறித்து கருத்து தெரிவித்தார்.
இறைவன் எனக்கு எந்த மாதிரியான பணிகளை வழங்க இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. தமிழகத்தில் இருந்து அரசியல் ரீதியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரக்கூடிய அழைப்புகளுக்கு ஒரு சகோதரத்துவத்துடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்.
ஆளுநர்கள் அவமதிக்கப்படுகிறார் என்று முரசொலியில் செய்தி வெளியிட்டது குறித்த கேள்விக்கு நான் அதை பற்றி கவலைப்படவில்லை. நான் எங்கும் அவமதிக்கப்படவும் இல்லை என்றார்.
இன்னொரு மாநிலத்தில் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரி மதிக்கப்படவில்லை என்று இங்கு உள்ளவர்கள் மனநிலை இருந்தால் அதற்கு நான் ஒன்றும் சொல்ல முடியாது.தெலங்கானாவில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான கூட்டங்களும் நடந்து முடிந்துள்ளது.
தேசிய கல்வி கொள்கை என்பது ஏதோ சும்மா உருவாக்கப்படவில்லை பல லட்சம் ஆசிரியர்கள் பல லட்சம் மக்கள் அதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்றதால் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் குறைபாடுகள் இருந்தால் அதை சுட்டிக் காட்டலாம். ஆனால் தேசிய கல்விக் கொள்கையை முழுவதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.