பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: 3 கோடி மக்கள் பாதிப்பு..!!
பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கியுள்ளது. 22 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான் 3 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உள்ளனர். பாகிஸ்தான் மக்கள் நிவாரண பணிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தெற்கில் உள்ள சிந்து மாகாணம் மழை, வெள்ளத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறுகையில் கடந்த 24 மணி நேரத்தில் 8 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,343 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். இந்நிலையில் வரும் மாதத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் 64 லட்சம் மக்கள் மனிதாபிமான உதவிகளை எதிர்நோக்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.