பணிப்பெண் சித்திரவதை: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி கைது
ராஞ்சி: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியான சீமா பத்ரா(29), அவரது வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த சுனிதா சாசா என்ற பெண்ணை கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார். இதனை அறிந்த ராஞ்சி காவல் துறையினர், அப்பெண்ணை அந்த வீட்டாரிடமிருந்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததோடு சித்திரவதை செய்தவர்கள் மீது வழக்கு பதிவையும் செய்துள்ளனர்.
கும்பலா மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதா சாசா ஒரு பழங்குடியினப் பெண். இவர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வீட்டில் பணியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியான சீமா பத்ரா அவரை கொடூரமாகச் சித்திரவதை செய்து வேலை வாங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சுனிதாவின் வாயில் இரும்பு கம்பியை வைத்து பற்களை உடைத்தும், சூடு கம்பியால் சுனிதாவை அடித்தும் கொடுமை படுத்தியுள்ளார். இந்த கொடுமைகளை தாங்காமல் சுனிதா தனது சொந்த கிராமத்திற்கு செல்ல சீமாவிடம் அனுமதி கேட்ட போது,அவரை கடுமையாக அடித்து ஒரு அறையில் அடைத்துவிட்டார், சீமா பத்ரா. இவர் பாஜக உறுப்பினர் ஆவார்.
இதனால் ஆத்திரமடைந்த சுனிதாவின் மகன், கும்பலா மாவட்டத்தின் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவலர், சீமா பத்ராவை கைது செய்ததோடு, சுனிதாவையும் மருத்துவமனையில் சேர்த்தனர். சுனிதா பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், மீண்டும் இயல்பு நிலைக்கு வர சில நாட்கள் ஆகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்குப் பிறகு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.