மருத்துவர்களுக்கு 1000 கோடி வழங்கிய டோலோ 650 நிறுவனம்
கொரோனா தொற்றின் போது அதிக விற்பனையான மாத்திரை டோலோ 650. 2019 – 2021 ஆண்டு வரை விற்கபட்ட டோலோ 650 மாத்திரை அடுக்கி பார்த்தால் அது இமைய மலையின் உயரத்தை விட அதிகமா இருக்கும் என்ற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில் தற்போது அதிகப்படியான டோலோ 650 மாத்திரைகள் விற்பனையை குறித்து அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளது. டோலோ 650 மாத்திரையை நோயாளிகளுக்கு பரிந்துரைத்த மருத்துவர்களுக்கு சுமார் ரூ. 1000 கோடி வரை செலவு செய்துள்ளது அந்நிறுவனம். இச்செய்தி தற்போது வெளியாகி இணையத்தில் பேசும் பொருளாகியுள்ளது. இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் “தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் விலை உயர்ந்த பரிசு பொருட்கள், வெளிநாட்டு பயணங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடுதல், போன்ற குற்றச் செயல்களுக்கு அந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்களைப் பொறுப்பாக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது காய்ச்சலுக்கு அளிக்கப்படும் டோலோ 650 மாத்திரைகளை நோயாளிகளுக்கு அதிக அளவில் பரிந்துரைப்பதற்காக அந்நிறுவனம் 1000 கோடி ருபாய் வரை மருத்துவர்களுக்கு வழங்க அந்நிறுவனம் செலவிட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் ஆஜர் ஆன மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி சந்திர சூட் “கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட போதும் தனக்கு அந்த மாத்திரைகள் தான் வழங்கப்பட்டது என கூறி இது மிகத் தீவிரமான பிரச்சனை இதை உடனடியாக கவனிக்க வேண்டும்” என கூறினார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் செப்டம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.