#BREAKING கள்ளக்குறிச்சி கலவரம்… டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை தொடர்பாக மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி சதீஷ்குமார் இன்று விசாரணை நடத்தினார். அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி
முதல் வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதுபதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?, போராட்டம் நடத்த அனுமதித்தது யார்?, மாணவியின் இறப்புக்கான காரணம் என்ன என சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், சிறப்பு படை அமைத்து அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது என்றும் நீதிபதி சதீஷ்குமார் கருத்து தெரிவித்தார்.
மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், தகுதியில்லாத மருத்துவர்கள் கொண்டு நடத்தப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை மறுத்த நீதிபதி, தகுதியில்லாத மருத்துவர்கால் என எப்படி சொல்லலாம். நீங்கள் என்ன நிபுணரா? என கேள்வி எழுப்பினார்.
வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கலவரத்தின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற இயற்கைக்கு முரணான மரணங்கள் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி விசாரணை குறித்த அறிக்கையை ஜூலை 29ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரரின் வழக்கறிஞர் உடன் இருக்கவும் அனுமதி அளித்துள்ளார்.