புதிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி
சுதந்திரப் போராட்ட வீரரான அல்லுரி சீதாராம ராஜூவின் 125 வது பிறந்த தினத்தை ஒட்டி, பீமாவரத்தில் அவருக்கு 30 அடி உயரம் கொண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி சிலையை திறந்து வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஆரம்பத்திலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அல்லுரி சீதாராம ராஜு. ஆதிவாசிகள் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தன்னை அர்ப்பணித்து, இளம் வயதிலேயே தியாகியாகி விட்டவர் என்று புகழாரம் சூட்டினார்.
நாடு தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, அல்லுரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்த தினமும் கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டிய பிரதமர், அல்லுரி சீதாராம ராஜூ வின் பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் கண்ட கனவுக்கு ஏற்ப புதிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய நரேந்திர மோடி, இதை கருத்தில் கொண்டு கடந்த 8 ஆண்டுகளாக தனது அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
நமது நாட்டின் இளைஞர்கள் நாட்டை வழி நடத்துவதன் மூலம் உருவாகும் புதிய பாரதத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.