பீகாரின் தொடரும் சோகம்..!! மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் பத்து பேர் பலி..!!
பீகாரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் பத்து பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் சரண் மாவட்டத்தில் ஆறு பேரும் , சிவான், ஹாஜிபூர், பாங்கா மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
பீகாரில் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலையில் போது வீட்டிலேயே பொதுமக்கள் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ள முதல்வர் நிதீஷ் குமார், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். பேரிடர் மேலாண் கழகத்தின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்