மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்..!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் மீது நேற்றிரவு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்துக்குள் நுழைந்த சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடப்பட்டது.
இதற்கு கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டினார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோல், கேரள அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நாளை மலப்புரத்தில் நடைபெற உள்ள காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது இந்த நேரத்தில் இது போன்ற சம்பவம் கட்சினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.