துணிந்து செயல்பட்ட ஜெகன் மோகன்..!! ஆந்திராவில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம்..!!
ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக கோனசீமா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவானது. இந்நிலையில் அம்பேத்கர் பெயர் சூட்ட அப்பகுதி மக்கள் மற்றும் எதிர்க் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அமலாபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க சில அமைப்பினர் சென்றனர்.
ஆனால் திடீரென இந்த கண்டன ஊர்வலம், போராட்டமாக மாறியது. இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். இந்நிலையில் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் புதிய மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து புதிய வருவாய் கோட்டங்கள் மற்றும் மண்டலங்களை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், இப்பகுதிகளில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆந்திர அரசின் ஆலோசகராக ராமகிருஷ்ண ரெட்டி கூறுகையில், மக்கள் தொகை மற்றும் உள்ளூர் மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பின் மாவட்டத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவில் அரசு உறுதியாக இருக்கிறது. அதன்படி அதிகாரப்பூர்வமாக டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என மறுபெயரிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.