மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜிப்மர் மருத்துவமனை..!! தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை புறக்கணித்த நிர்வாகம்..!!
சமீபத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹிந்தி திணிப்பு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சர்வதேச பொது சுகாதார பள்ளியை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழ் தாய் வாழ்த்து பாடியே ஆக வேண்டும் என ஜிப்மர் இயக்குனரை வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் நடுவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு, நோயாளிகள் அலைக்கழிப்பு என ஜிப்மர் நிர்வாகம் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்ச்சை குறிப்பிடத்தக்கது.