21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்..!! இலங்கை அரசியலில் பரபரப்பு..!
கடந்த சில மாதமாக இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம் தான் காரணம் என கூறி இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் அதிகரித்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகினார்.
இதையடுத்து புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அதனை தொடர்ந்து இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரங்களை பறித்து, நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 21 வது திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 21வது சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் இன்று அளித்துள்ளது. இந்த சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்து உள்ளார். 21 வது சட்டத்தின்படி அதிபர் அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்பாவார்.
அதுமட்டுமில்லாமல் தேசிய கவுன்சில் மற்றும் மேற்பார்வை குழுக்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்பாவார்கள். மேலும் 21 ஏ சட்டத்திருத்தத்தின் மூலம் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், இரட்டை குடியுரிமை, அரசு பதவிகளில் பணி ஆகியவற்றுக்கு தடை விதிக்கும் 21-ஏ சட்ட திருத்தம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.