வங்கதேசத்தில் வரலாறு காணாத மழை..!! இதுவரை 59 பேர் பலி..!!
வங்கதேசத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 59 பேர் பலியாகி உள்ளதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த கனமழை காரணமாக 40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக சில்ஹெட் மற்றும் சுனம்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் மழை, வெள்ளம் காரணமாக பாதிப்பு அதிகரித்துள்ளது.
நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுர்மா ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சில்ஹெட் நகரில் உள்ள கரையோர வீடுகள் அனைத்தும் மூழ்கிவிட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது.
சில்ஹெட் சர்வதேச விமான நிலையத்தையும் மழைநீர் வியாபித்து இருப்பதால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ளப்பாதிப்பு வங்கதேசம் எதிர்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.