அக்னிபாத் திட்டத்திற்கு வலுக்கும் போராட்டம் ..!! 200 ரயில் பெட்டிகள் எரிப்பு..!!
ஒன்றிய அரசின் புதிய திட்டமான அக்னிபாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக இன்றும் பீகார் மாநிலத்தில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து ரயில் பாதை மற்றும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் லக்கி சராய் நகரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் விரைவு வண்டியின் பெட்டிகளை எரித்துள்ளனர்.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள ரயில்களுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். இந்திய ஆயுதப்படையைப் பலப்படுத்துவதன் ஒரு பகுதியாக முப்படைகளில் இளம் வீரர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கான புதிய அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். 4 ஆண்டு கால சேவை முடிந்த பின் அக்னி வீரர்களில் 25% பேர் ராணுவத்தில் நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.
மீதமுள்ள 75% பேர் ஓய்வூதியம் இல்லாமல் பணியிலிருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்படுவார்கள். இத்திட்டத்தில் 4 ஆண்டு கால குறுகிய சேவை நிறைவு செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் டெல்லி, கொல்கத்தா பிரதான ரயில் பாதையில் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் பல ரயில்கள் சேதம் அடைந்துள்ளது.