சீக்கியர்கள் குறித்து தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – கிரண் பேடி
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவி வகித்த கிரண் பேடி சமீபத்தில் சீக்கியர்களை கேலி செய்யும் விதமாக நகைச்சுவை கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி. ஐபிஎஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்று 2015-ம் ஆண்டு காலகட்டத்தில் பாஜகவில் இணைந்தார்.
தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் கிரண்பேடி அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் தான் எழுதிய பியர்லஸ் கவர்னன்ஸ் என்ற புத்தகத்தை சென்னையில் கடந்த திங்கட்கிழமை அவர் வெளியிட்டார்.
அப்போது அவர் சீக்கியர்களின் அறிவாற்றலை கிண்டல் செய்யும் விதமாக நகைச்சுவையாக மேடையில் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி நிலையில் நாடு முழுவதும் உள்ள சீக்கிய அமைப்புகள் கிரண் பேடிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பொறுப்பாளர் ஜர்னைல் சிங் பேசுகையில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர்நீத்தவர்களுக்கு பெரும்பாலானோர் சீக்கியர்கள். முகலாயர்கள் நமது பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர்களை எதிர்த்து போராடியவர்கள் சீக்கியர்கள்.
இன்னும் எத்தனை காலத்திற்கு தான் கேலி செய்வீர்கள் என கோபம் கொண்டார். இந்நிலையில் இந்த கோலி பேச்சுக்கு கிரண்பேடி ட்விட்டரில் மன்னிப்பு பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட இந்த பதிவில் எனது சமூகத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். எனது பேச்சை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.