பாலிவுட்டில் பரபரப்பு… ஷாருக்கான் இல்லத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் திடீர் சோதனை!

நடிகர் ஷாருக்கான் இல்லத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை; ஆரியனிடம் இருந்து போதை பொருள் கைபற்றாத நிலையில் வீட்டில் சோதனை.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மேற்கு பாந்த்ரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தியதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதற்கு பின்பு கடந்த 8ம் தேதி முதல் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மும்பை கீழமை நீதிமன்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ததோடு முன்ஜாமீன் வழங்க இரண்டு நீதிமன்றங்களும் மறுத்தது. இந்த நிலையில் முன் ஜாமீன் கேட்டு ஆரியன் தரப்பு மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், இன்று காலை நடிகர் ஷாருக்கான் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் தன் மகன் ஆரியன்கானை சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் சந்தித்துப் பேசினார். இந் நிலையில் இன்று பிற்பகலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மும்பை பாந்த்ராவில் வசிக்கும் நடிகர் ஷாருகான் இல்லத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐந்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்; ஏற்கனவே நீதிமன்ற விசாரணைகளின் போது ஆரியன்கான் தரப்பினர் ஆரியனிடம் இருந்து எந்த போதைப் பொருட்களும் கைப்பற்றப்படவில்லை! என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சர்வதேச போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் தரகர்களுடன் ஆரியன்கான் பேசியதற்கான வாட்ஸப் சாட் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சமீப மாதங்களுக்கு முன்னர் மிகப்பெரிய அளவில் போதைப் பொருட்களை வாங்குவதற்கான உரையாடல்களும் இடம் பெற்றிருப்பதை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் அவருடைய இல்லத்தில் இந்த சோதனை என்பது நடைபெற்று வருகிறது, குறிப்பாக ஆரியன் கான் அறையில் போதைப்பொருட்களை எதுவும் பதுக்கி வைக்கப்பட்டிருகிறதா? அவர் பயன்படுத்திய பொருள்களில் போதைப் பொருட்கள் எதுவும் மறைத்து வைத்துள்ளாரா? என்ற அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரியன் கான் உட்பட இவ்வழக்கில் தொடர்புடையவரகள் என சந்தேகிக்கப்படும் இருவரது வீட்டிலும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.