நீட் தேர்வு விவகாரம் ; இயலாமையை மறைக்க எங்கள் மீது பழி போடுவதா!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோமென்றும், நீட் நுழைவுத்தேர்வினை ரத்து செய்வதற்கான வழி எங்களுக்கு தெரியுமென்றும் பொதுமக்களிடத்தில் வாக்கு கேட்ட திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், எங்கள் மீது பழி சுமத்துகிறார் என தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்த 24 மணிநேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். நீட் தேர்வை ரத்துசெய்ய வழி தெரியும் எனக்கூறிய ஸ்டாலின் தன் இயலாமையை மறைக்க என்மீது பழிபோடுகிறார். ஓராண்டுக்கு நீட் தேர்வில் விலக்கு கேட்டும், நீட் தேர்வில் நிரந்த விலக்கு கேட்டும் அதிமுக போராடியது. ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடியானதற்கு நீட் தேர்வே ரத்தானது போல் அறிக்கைவிடுகிறார் முதல்வர். எதிர்க்கட்சியான பிறகும் எங்களை பாஜகவின் பாதம் தாங்கி என நாகரிகம் இன்றி நஞ்சை கக்கி இருக்கிறார்.
நீட் முதல் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஒவ்வொரு அடியையும் மிகவும் எச்சரிக்கையாக வைத்து செயல்பட்டோம். நீட் விவகாரத்தில் திமுக ஆட்சியாளர்கள் வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திமுக அரசு அமைந்து நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே இந்த கல்வியாண்டில் நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, முதல்வரிடம் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.