சிப்காட் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

கடலூரில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் திடீரென அமோனியா பாய்லர் வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடலூர் மாவட்டத்தில், சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் கிரிம்சன் நிறுவனத்தில் 13-5-2021 அன்று அமோனியா பாய்லர் வெடித்ததில் அமோனியா வாயு வெளிவந்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் மாவட்டம், பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜ்குமார், செம்மங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் என்பவரின் மகன் கணபதி, காரைக்காடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி சவித்தா, புவனகிரி பகுதியைச் சேர்ந்த விசேஸ்ராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தில் 10 பேர் காயமடைந்து, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.