கன்னியாகுமரியில் ராகுல்காந்தி; குதுகாலித்த மாணவர்கள்

குமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க ராகுல் காந்தி நடனமாடினார்.
தக்கலை அருகேயுள்ள முளகுமூடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாணவ மாணவிகளுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர் பேசும்போது, “இன்றைய நிகழ்ச்சியில் நான் மாணவர்களுடன் கலந்து கொண்டதை எண்ணி பூரிப்படைகிறேன். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து மிகவும் பிரமிப்படைந்தேன். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் இருக்கும். மாணவ சமுதாயத்தின் இலக்கு, கனவு என்ன என்பது குறித்து அறிவதற்காகவே இங்கு வந்துள்ளேன்.
நாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் இருக்கலாம். பல தலைவர்கள் ஏழைகளுக்கு உதவக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு நல்ல சமுதாய நோக்குடன் செயல்படும் தலைவர்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். கல்வித் துறையில் ஆசிரியர்களும், மாணவர்களும் மிக முக்கியமானவர்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வு என்பது மாணவர்களின் கனவை தகர்க்கக்கூடிய ஒரு திட்டமாகும்” என்றார்
பின்னர், மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று அவர்களுடன் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினார். அவருடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரும் இணைந்து நடனமாடினார்.