ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையின் உபரிநீரை ரூ 565 கோடியில் 100 வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் கூறுகையில் மேட்டூர் அணை 120 அடியை எட்டியதும் உபரிநீர் டெல்டா பாசனத்திற்கு போக மீதம் கடலில் கலந்து வருகிறது.
மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை கால்வாய் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து எம்.காளிப்பட்டி ஏரி துணை நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் ஏரி துணை நீரேற்று நிலையம், கண்ணந்தேரி ஏரி துணை நீரேற்று நிலையம் ஆகியவற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.
இத்திட்டத்தால் மொத்தம் 4 ஆயிரத்து 240 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, 48 கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி அடைந்து, நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் விவசாயம், கால்நடைகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மேன்மையடையும். மேலும், மக்களின் பொருளாதார நிலை மேம்படும்.
குறுகிய காலத்தில் மேட்டூர் உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும். 5 ஆண்டு காலத்தில் 2 முறை விவசாயிகளின் பயிர்க் கடனை ரத்து செய்துள்ளோம் என்றார்.