ஒரேநாளில் 20 ஆண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை‌ செய்த அரசு மருத்துவமனை

ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக 20 ஆண்களுக்கு ஒரேநாளில் நவீன கருத்தடை அறுவை சிகிச்சை‌ மேற்கொண்டு அந்தியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாதனை. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் செயல்படும்  மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு அந்தியூர் வட்டார  மருத்துவ அலுவலர் டாக்டர்.சக்தி கிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று ஆண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி 20 ஆண்களை கருத்தடை அறுவை சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தனர்.

தொடர்ந்து அவர்களுக்கு பவானி அரசு மருத்துவமனை மற்றும் ஈரோடு அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து வந்திருந்த அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நவீன கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அனைவருக்கும் அரசின் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட குடும்பநலத்துறை துணை இயக்குனர் டாக்டர்.ராஜசேகரன் தெரிவிக்கையில்,

ஈரோடு மாவட்டத்தில் ஓரே நாளில் 20 ஆண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை என்றும் இதற்காக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து சுகாதார ஆய்வாளர்களை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *